animated gif how to

“நோம்பி அரிண்ட துன்ன னே மச்சான் ” ஓரு சகோதர இன நண்பரின் வாக்கு மூலத்திலிருந்து…

August 17, 2012 |

-மூதூர் முறாசில்-

ஒரு பிரதேசத்தில் முக்கியமான பொறுப்பிலிருக்கும் சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த நண்பர் ஓருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு (கடந்த திங்கட் கிழமையன்று) பேசினார். அப்போது அப்பகுதியில் நடந்த ஓரு அரசியல் நிகழ்வு பற்றி தனது ஆதங்கத்தை நண்பர் என்ற உரிமையுடன் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.குறித்த அந்த நண்பர் இஸ்லாமும் முஸ்லிம்களும் நல்லவர்கள்என்ற அபிப்பிராயத்தைஉடையவர்.

அந்த நண்பரது பேச்சில் மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஓரு வாசகத்தைத்தான் நான் மேலே தலைப்பாக குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் அர்த்தம் அனேகருக்குத் தெரிந்ததுதான். (நோன்பு துறப்பதற்கு விட இல்ல மச்சான்…” என்பதே அதுவாகும்.) இவ்வசனத்தை வாசித்ததும் இப்போது- எங்கு? எப்போது? எவரால்? என்ன? நடந்தது என்பது உங்கள் மனக்கண்முன் வரும் என்பதனால் குறித்த அச்சம்பவத்தை மீளக்கூறுவதை தவிர்த்துக் கொள்கின்றேன்.

“…எது எப்படியிருந்தபோதும் நோன்பு துறக்க வந்தவர்களை விடாதது எனக்கு சரியான கவலையாக இருக்கு..என்றும் அந்த நண்பர் ஒரு கட்டத்தில் கூறி பேச்சை முடித்தார். அப்போது என் எண்ணத்தில் மியன்மார், சீனா முதலான பௌத்த நாடுகள் முஸ்லிம்கள் நோன்பு இருப்பதில் பெரும் இடையூறை செய்து வரும் இக்காலத்தில் இந்ந பௌத்த நண்பர் முஸ்லிம்களான அதிலும் நோன்பாளிகளான ஒரு குழுவினர் மற்ற குழுவினரை நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளாது தடுத்தது சம்பந்தமாக கவலைப்படுவதை உணர்ந்த போதுதான் எனக்கும் கவலை ஏற்பட்டது.
இஸ்லாம் -முஸ்லிம் நோன்பு என்பதன் தாற்பரியத்தை எம்மவர்கள் மறந்துவிட மாற்றுமத சகோதரர்கள் ஞாபக மூட்டும் நிலைமை உருவாகிவிட்டதோஎன்ன கொடுமையிது! நோன்பின் மாண்பு அறியாத இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள்தானா? அல்லது வேடதாரிகளா? அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம.;..!
இங்கு சம்பந்தப்பட்ட இரு குழுவினரும் நோன்பின் தத்துவத்தைகுறைந்த பட்சமாவது உணர்ந்திருந்தார்களா என்பது இங்கு சிந்திக்கப் படவேண்டியதாகும். ஏனெனில், கடந்தமுறையும் இதேமாதிரியான சிக்கலொன்று இதே குழுவினருக்கு இதேஇடத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த அனுபவத்தைக் கொண்டு ஒரு குழுவினர் நோன்பு நோற்ற நிலையில் அதே இடத்திற்கு செல்வதை தவிர்த்திருந்தால் அல்லது கடந்தமுறை நோன்பாளிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுவிட்டது , இம்முறை அப்படி எதுவும் இடம்பெறக்கூடாது என்று மற்ற குழுவினர் செயற்பட்டிருந்தால் இங்கு ஓரு பௌத்த சகோதரரின் கவலைக்கு இடமில்லாது போயிருக்கும்.
ஆனால் என்ன நடக்கின்றது…? ஏன் ஈமானிய உணர்வில்லாத வெறுமையானஇதயங்களோடு இவர்கள் இருக்கின்றார்கள்? புனித இபாதத்திற்கு மட்டுமன்றி முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தியை ஏன் ஏற்படுத்துகின்றார்கள்?முஸ்லிம்களது இபாதத்சம்பந்தமாக சகோதர இனத்தவர்கள் எவ்வளவு மதிப்பை வைத்திருக்கின்றார்கள் என்பதை அளவிடுவதற்கு என்னெதிரே இடம்பெற்ற ஒரு சம்பவத்தை எழுதுகின்றேன்.
அண்மையில் திருகோணமலையில் சுகாதார திணைக்களத்தின் அலுவலர்களுக்கான ஓரு நாள் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டிருந்தேன். அதில் முஸ்லிம்களோடு தமிழ், சிங்கள சகோதரர்களும் பங்குபற்றியிருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பத்தில் சகோதர இனத்தைச் சேர்ந்த மேலதிகாரி தனது தலைமை உரையில் நோன்பு சம்பந்தமாகவும் கூறினார்.
அந்த தலைமை அதிகாரி கூறியதில் முக்கியமானது இதுதான்: செயலமர்வை பிற்போட முடியாததனால் நோன்பு காலத்தில் இதனை நடத்துவதற்கு நிர்ப்பந்தத்திக்கப்பட்டுள்ளோம்.முஸ்லிம் சகோதரர்கள் நோன்புடன் இவ்வமர்வில் கலந்து கொள்வதனால் தேநீர்,மதிய போசணம், தண்ணீர் எதுவும் இங்கு எவருக்கும் வழங்கப்படமாட்டாது. உணவிற்குப் பதிலாக கொடுப்பணவு ஒன்று வழங்கப்படும்
இது இவ்வாறிருக்க, நோன்பாளிகளை அனுசரித்து நடந்த சக உத்தியோகத்தர்கள் தாமும் செயலமர்வு முடியும் வரை அவ்விடத்தில் தண்ணீரைத்தானும் அருந்தாது நீண்ட நேரத்தைக் கழித்திருந்தனர்.நம்மவர்களின் நிலைமையோடு ஒப்பிடுகின்றபோது இது எப்படி இருக்கின்றது?
அது போகட்டும்நமது அரசியல் வாதிகளது பேச்சும் அறிக்கைகளும் செயற்பாடும் எவ்வாறு இருக்கின்றன…? இது பற்றி அக்கறை எடுப்பது யார்? “ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமின் சகோதரன்என்று விதி செய்து நபிகளார் கட்டி வளர்த்த ஈமானிய சமூக கட்டமைப்பை தகர்த்தெரிந்து தானும் தனது கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே சிறந்தவர்களென இலக்கணம் கூறி மாற்றுக் கட்சியினரை வசைபாடுகின்ற இழிநிலை இங்கு தொடர்கின்றது.
அரசாங்கத்தில் இணைந்திருக்கின்ற ஓரே காரணத்திற்காக அரசாங்கத்தின்; புகழேந்திகளாக இருந்து முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகத்தினருக்கு காட்டிக் கொடுக்கும் வஞ்சக நிலை இடம்பெறுகிறது. அதேபோல் எதிர்கட்சிதான் தான் இருக்கும் கட்சி என்பதற்காக ஆளும் கட்சியிலிருக்கும் சகோதரனின் அத்தனை செயற்பாட்டையும் முற்று முழுதாய் எதிர்க்கும் நிலை உருவாகி இருக்கின்றது.
முனாபிக்என்னும் நயவஞ்சகனுக்கு நபிகளார் அடையாளப்படுத்திக் காட்டிய அ த்தனை இயல்புகளோடும் சிலவேளை அதையும் தாண்டி ஏனைய இழிவான பண்பு களோடும் நமது அரசியல் வாதிகளில் பெரும்பாலானோர் இணைந்திருக்கின்ற அவலத்தைப் பார்க்கின்றோம்.
ஓரு முஸ்லிமின் பண்புகளுக்குப் புறம்பான இத்தகைய இயல்புகள் இஸ்லாமிய அரசியல்வாதிகளை ஆக்கரமித்திருப்பது ஓரு ஆபத்தான நிலையாகும். அத்தகைய பண்புடையவர்களை தமது தலைவராக ஈமானிய உள்ளங்கள் ஏற்றிருப்பதும் அதைவிட பேராபத்தான நிலையாகும்!
எது எவ்வாறாக இருந்தபோதும் ஏனைய விடயங்களைப் போல் அரசியல் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் வாக்களித்தவர் தொட்டு வாக்கைப்பெற்றவர் வரைக்கும் உள்ள நாம் அனைவரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமையை மறந்து விடமுடியாது! மரணத்தோடு ஆரம்பிக்கின்ற மண்ணறை வாழ்கையில் சந்திக்க இருக்கின்ற சங்கதிகளை- அல்லாஹ்வைத்தவிர உதவிக்கு யாருமே இல்லாத படுபயங்கரமான சந்தர்ப்பங்களை சிந்தனையில் இருத்தி, அரசியல் அமானிதங்களைசீரமைப்போம் வாருங்கள்!!

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!