animated gif how to

மியன்மாரில் கொடூரமாக கொன்றொழிக்கப்படும் முஸ்லிம்கள் தட்டிக்கேட்க யாருமில்லை..?

July 21, 2012 |

-மூதூர் முறாசில்-

ஆரம்பத்தில் இந்திய பெருநிலப்பரப்பில் ஒரு பகுதியாக இருந்து பின்பு பிரிந்து சென்ற ஓரு தென்கிழக்காசிய நாடே பர்மாவாகும்.  இது 1989ல் ஐக்கிய மியன்மார்என தன்பெயரை மாற்றிக் கொண்டது. இந்நாடு நமது இலங்கை நாட்டைக் காட்டிலும் சரியாக ஒருமாதத்திற்கு முன்னர் 1948 ஜனவாரி  மாதம் 4ஆம் திகதி பிருத்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.

மியன்மாரில் இருக்கும் 54 மில்லியென் சனத்தொகையில் 8.1 மில்லியன் மக்கள் முஸ்லிம்களாகும். அதாவது மொத்த சனத் தொகையில் 15 வீதமானோர் ஈமானை சுமந்தவர்களாகும். இந்தவகையில் தேரோவாத பௌத்தத்தை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் மத்தியில் இரண்டாவது சமயப்பிரிவினராக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நாட்டில் முக்கிய நகரங்கள் தோறும் முஸ்லிம்கள் உள்ளனர்.பிராந்திய ரிதியாக பார்க்கின்றபோது மேற்கு மியன்மாரில் அரக்கான் (ARAKANபிராந்தியமே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் விஸ்தீரணம் 32,180 சதுர கிலோ மீற்றராகும். இதில் 75 வீதத்திற்கு மேல் முஸ்லிம் மக்கள் உள்ளனர். (இப்பிராந்தியமே தற்போது செந்நிறமாக மாறி வருகின்றது)

மியன்மார்  சுதந்திரம் அடைவதற்கு முந்திய நிலைமையைக் காட்டிலும் சுதந்திரத்திற்கு பின்பே முஸ்லிம்களுக்கெதிரான துவேச விதைகள் நடெங்கும் பாரியளவில் விதைக்கப்பட்டன. அவை பென்னம் பெரிய விருட்சங்களாக இன்று வளர்ந்தோங்கி விட்டன. இதனால் ஒரு காலத்தில் கீழத்தேய நாடுகளின் அரிசிக்கிண்ணமாக பார்க்கப்பட்ட மியன்மார் தற்போது முஸ்லிம்களுக்கான வதைகூடமாக பரிணமித்திருக்கின்றது.(இக்கட்டுரை சுருக்கமாக எழுதப்படுவதால் சுதந்திரத்திற்கு முந்திய நிலைமைகள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.)

இலங்கை முஸ்லிம்களைப் போலவே மியன்மார் முஸ்லிம்களில் அனேகர் அரபியவம்ச வழிவந்தவர்களாகும். எட்டாம் நூற்றாண்டில் ஓர் நாள் மியன்மாருக்கு அண்மையாக கப்பலில் பயணித்த அரபியர் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் பயணத்தைத் தொடரமுடியாது மியன்மாரில் கால் பதித்தனர். (ஏழாம் நுhற்றாண்டில் ஆரம்ப காலத்தில் மியன்மாரில் அரபியரின் தொடர்பு இருந்ததாக சிலர் கூறுகின்றனர் அன்றிலிருந்து அரபியர்களுக்கும் இந்நாட்டிற்குமிடையிலான தொடர்பு நீண்டது. அரபியர்கள் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாயிருந்த பர்மிய பெண்களை நிகாஹ்செய்தனர். அதன் மூலம் முஸ்லிம் குடிபெருக்கம் ஏற்பட்டது.

அரபியர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகவும்  செல்வந்தர்களாகவும் இருந்ததும் அவர்கள் பர்மிய பெண்களை நிகாஹ்செய்ததும் அதன் மூலம் முஸ்லிம்கள் பெருகியதும் இதற்கெல்லாம் மேலாக ஒப்பீட்டளவில் மியன்மாரின் பூர்வீக புத்திரர்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் சிறந்த வாழ்க்கை வசதியைப் பெற்றிருந்ததும் பெரினவாதிகளின் உள்ளத்தில் நீண்ட காலமாக பொறாமைத்தீயைப் பற்றவைத்தது. இதன்வெளிப்பாடாகவே பல தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கெதிரான சூட்சுமமான நாசகாரத்திட்டங்களின் அரகேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மியன்மாரில் முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாக கொல்லப்படுவதும் இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதும் சொத்துக்கள் கபளிகரம் செய்யப்படுவதும் காலம் காலமாக இடம்பெற்று வந்த போதும் கடந்த ஓரு தசாப்தமே இனஅழிப்பின் சிகரத்தை எட்டியுள்ளது.

இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் வகை தொகை இல்லாது கொலை செய்யப்பட்டனர். பள்ளிவாசல்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன.முஸ்லிம் பாசாலைகள் யாவும் மூடப்பட்டன.அங்கு வாழும் முஸ்லிம்களால் இஸ்லாத்தை படிப்பதும் போதிப்பதும் ஆகாது. இஸ்லாமிய ஆடைகளை அணிவதற்கு இயலாது. சங்கங்கள் அமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் உரிமை இல்லை. பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை கிடையாது. ஹஜ்ஜுக்கு யாத்திரை செல்லத் தடை. பெருநாட்கள் கொண்டாட முடியாது. இதெல்லாம் என்ன அல்லாஹ்வை தொழுவதற்கு கூட முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட தீவிர போராட்டத்தின் தொடரில் அதியுச்சத்திற்குச் சென்று 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் தீவிர வாதிகளின் முடிசூட்டுவிழா பிரகடனம் செய்யப்பட்டது போல்  முஸ்லிம்களுக்கெதிரான வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து பல்லாயிக்கணக்கான மக்கள் வெட்டியும் கொத்தியும் தீயிட்டு கொளுத்தியும் கொல்லப்படுகின்றனர். கணக்கு வழக்கின்றி பெண்களின் மானங்கள் கயவர் கூட்டங்களினால் துடைத்தெறியப்படுகிறன. கோடி கோடியாய் உடைமைகள் கொள்ளையிடப்படுகின்றன. மாடி வீடுகள் தொட்டு குடிசைகள் வரை வாழிடங்கள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. (கடந்த சில வாரங்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கு அதிகமானோர்  கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது)

மியன்மாரில் செயற்பட்ட நடுநிலையான ஊடகங்களின் பணிகள் முடக்கப்பட்டதனால் முஸ்லிம்களது பாதிப்புக்கள் பற்றிய தகவல்கள் வெளியுலகைச் சென்றடைவது தடைப்பட்டுள்ளது.
இதனால் உயிர் பிழைத்தோர் இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையில் பரம்பரையாக வாழ்ந்த தமது சொந்த வாழிடத்தைவிட்டுவிட்டு அகதி நாமத்தோடு பங்காளதேஷ் முதலான அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு இடம்பெயர முடியாதோர் சொந்த நாட்டிலேயே வெட்டவெளிகளில் ஊண் உறக்கமின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இத்தகைய இன ஒழிப்பு வேலைத்திட்டத்தை சரியாக திட்டமிட்டு மிக நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்பவர்கள் யார். அவர்கள்தான் இனந் தெரியாதவர்கள்’ !

இவ்வளவும் நடந்தபோதும் நடத்தாட்டுகின்றபோதும் மியன்மார் அரசாங்கம் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கிறது. ஆம். அரசாங்கம் அல்லவா அது அப்படித்தான் நடக்கும்! ஆனால், 1991ஆம் ஆண்டில் சமதானத்திற்கான நோபல் பரிசை வென்ற எதிர்க்கட்சி தலைவி ஆங்சாங் சூகி கூட  இவ் அக்கிரமம் குறித்து சும்மா ஓர் வார்த்தையைத்தானும் வெளியிடாதது அவரும் கூட அந்த இனந்தெரியாதவர்என்பதனாலோ?

மனித உரிமைகள் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் தாபனமும் இவ்விடயத்தில் எவ்வித அக்கறையையும் வெளிக்காட்டவில்லை. இந்நிறுவனங்களைப் பொருத்தமட்டில் முஸ்லிம்கள் மீது பெரிதும் கரிசனையற்றவர்கள் என்பது நாம் அறிந்த விடயம்தான். ஆனால், முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம் நிறுவனங்களும் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதன் மர்மம்தான் விளங்கவில்லை.

எனவேஈமானிய இதயங்களே, மியன்மார் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு முதலில் அல்லாஹ்விடம் உளப்பூர்வமாக இறைஞ்சுங்கள் அதன் பின்பு அகதிகளாக இடம்பெயர்ந்திருப்போருக்காவது இயன்ற அளவு உதவுங்கள். உங்கள் ஹதியாக்களுக்கு ஒன்றுக்கு பன்மடங்கு நன்மையை குவிப்பதற்கு ரமழான் மாதமும் வந்து வாய்த்திருக்கின்றது. உங்கள் உதவிகளைப் பெற்று உரியவர்களுக்கு வழங்குவதற்காக நம்பிக்கையான முஸ்லிம் நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

அத்தோடு, இம்மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பொறுப்பற்ற முறையில் செயற்படும் மியன்மார் அரசாங்கத்தை நோக்கி சர்வதேச சமூகம் கூடிய பார்வையை செலுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் பெருந்தகைகளே உங்கள் ஆற்றலை மிகக் கவனமாக வெளிப்படுத்துங்கள். அதன் மூலம் மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!