animated gif how to

ஈராக்கில் 17 பில்லியன் டொலர்களை திருடிய அமெரிக்கா

June 24, 2011 |

June 24, 2011.... AL-IHZAN World News
ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பின்னர் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் வருமானம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் ஈராக்கியப் பாராளுமன்றம் இதனைக் கண்டுபிடிப்பதற்கு ஐ.நா.வின் உதவியை நாடியுள்ளது. ஈராக்கில் முன்னாள் ஆட்சியாளர் சதாம் ஹூசைனின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டின் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவிலிருந்து ஈராக்கிற்கு கொண்டுவரப்பட்ட நிதியே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஈராக்கிய பாராளுமன்றத்தின் ஒருமைப்பாட்டுச் சபை கடந்த மாதம் பாக்தாத்திலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள கடிதத்தில் 2004 இல் ஈராக்கின் அபிவிருத்தி நிதியத்திலிருந்து இந்நிதி திருடப்பட்டுள்ளதாகவும் இதனைக் கண்டுபிடிக்க உதவுமாறும் கோரப்பட்டுள்ளது...
ஐ.நா.வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில் ஈராக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 17 பில்லியன் டொலர்கள் ஈராக்கியர்களின் நிதி திருடப்பட்டுள்ளதாகவும் இந்நிதி மோசடியில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளமைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஒரு நிதியியல் ரீதியான குற்றமெனத் தெரிவித்துள்ள இச்சபை ஆனால் ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தீர்மானம் அமெரிக்காவுக்கு எதிராக இக்குற்றச்சாட்டை தெரிவிப்பதிலிருந்து ஈராக்கைத் தடுக்குமெனக் கூறியுள்ளது.

மேலும் இவ்விவகாரத்தை உங்கள் முன் கொண்டு வருவதற்கு எமது சபை தீர்மானித்துள்ளது.திருடப்பட்ட நிதியை மீண்டும் பெற்றுக்கொள்வது குறித்து ஆராயப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் நகலொன்று ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குக் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து கருத்துகளுக்காக ஐ.நா.அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லையென ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 2003 இல் இடம்பெற்ற அமெரிக்கப் படையெடுப்பின் பின் ஈராக்கிய அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்குவதற்காகவும் மீள் கட்டுமானத் திட்டங்களுக்காகவும் 2003 இல் ஈராக்கின் அபிவிருத்தி நிதியம் நிறுவப்பட்டது.

2004 இல் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் இந்நிதியத்திற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் வழங்கப்பட்டது.இந்நிதியானது ஈராக்கின் எண்ணெய் விற்பனை,ஐ.நாவின் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஈராக்கிய சொத்துகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.

இந்நிலையில் கடந்த ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் போது 17 பில்லியன் டொலர்கள் நிதி காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்நிதியைக் கையாளும் நடவடிக்கைகள் எதிலும் ஈராக்கியர்கள் ஈடுபடவில்லை என்பதால் அமெரிக்க நிர்வாகமே இதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவையைக் கொண்டிருப்பதாக ஈராக்கிய அரசின் பேச்சாளர் அலி அல்டப்பா தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!