animated gif how to

பாப்ரி மஸ்ஜித்:தீர்ப்பு ஆச்சரியமளிக்கிறது - வி.ஆர்.கிருஷ்ணய்யர்

October 01, 2010 |

October 01, 2010
பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு முற்றிலும் ஆச்சரியமளிப்பதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது:"இது சரியான தீர்ப்பு அல்ல. ஒன்று முஸ்லிம்களுக்கு நிலத்தை அளிக்கவேண்டும். இல்லாவிட்டால், ஹிந்துக்களுக்கு அளிக்கவேண்டும். இரண்டுமில்லாமல், 3 நீதிபதிகள், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை 3 துண்டுகளாக பங்கு வைத்தது சரியல்ல. இந்த தீர்ப்பு வெறும் தந்திரமே.

நீதிபதிகள் மதம் மற்றும் ஜாதிக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும். அவர்களிலும், மதவெறி தீண்டிவிட்டதா என்ற ஐயத்தை உருவாக்குகிறது 3 பங்காக பிரிக்கவேண்டும் என்ற இத்தீர்ப்பு.

இரு பிரிவினர்களிடையேயான நிலம் தொடர்பான வழக்கில் தீர்மானம் எடுக்க ஒரு உயர்நீதிமன்றம் 62 ஆண்டுகள் வரை காத்திருந்தது உலகில் எங்கும் காணமுடியாத ஒன்று. இதற்காக உச்சநீதிமன்றம் நேரத்தை செலவிட்டதும் ஏற்றுக்கொள்ளவியலாது. காலதாமதமான சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பை எப்பொழுது, எவ்வாறு வழங்கவேண்டும் என உபதேசித்துள்ளது. இதுதானா ஒரு உச்சநீதிமன்றத்தின் பொறுப்புணர்வு? உயர்நீதிமன்றம் என்பது பொறுப்புணர்க்கொண்ட நீதிமான்களின் அரங்காகும். எப்பொழுது தீர்ப்பு வழங்கவேண்டும் என உத்தரவிடுவது வெட்கக்கேடானதாகும்.

ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பெயரால் 144 தடை உத்தரவு பிறப்பித்து தேசத்தை ஸ்தம்பிக்க வைத்ததை அங்கீகரிக்க இயலாது. தடை உத்தரவின் மூலம் அரசு பொதுவாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஒரு நிலம் தொடர்பான வழக்கின் பெயரால் மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் இன்னும் சில மனித உரிமைகளையும் தடைச்செய்தது கண்டிக்கத்தக்க ஒன்று என்று மட்டுமே கூற இயலும்.

நம்முடைய தேசம் 5000 ஆண்டுகள் முதிர்ச்சியுடைய கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டது. ஒரு தீர்ப்பின் பெயரால், மக்கள் பரஸ்பரம் போர்புரிவார்கள் என்ற தவறான புரிந்துணர்வால் லட்சக்கணக்கான ராணுவத்தினரையும், காவல்துறையினரையும் பயன்படுத்தியது தேசத்திற்கு அவமானமாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இனிமேலும் தேசத்தை அவமானத்திற்குள்ளாக்க வேண்டாம் என பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!