January 16, 2011.... AL-IHZAN World News
நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து துனீசியா அரசை அதிபர் ஸைனுல் ஆபிதீன் பின் அலி கலைத்தார்.
ஆறு மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் பத்திரிகைகளுக்கு தெரிவித்தன.ஆனால் இடைப்பட்ட கால அளவில் நாட்டின் ஆட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்குமென்பது தெரிவிக்கப்படவில்லை.
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தி அதிபர் பின் அலி ராஜினாமாச் செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
தலைநகரான துனீஸில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற போராட்டத்தில் பின் அலி ராஜினாமாச் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
1987 ஆம் ஆண்டு முதல் பின் அலியின் தலைமையிலான அரசுதான் துனீசியாவை ஆட்சி புரிந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில்தான் அதிபர் பதவியிலிருந்து விலகுவேன் என பின் அலி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
துனீசியாவில் இரவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியே இறங்கியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொலைச்செய்ததாக குற்றஞ்சாட்டி நேற்று பெரும் மக்கள் திரள் கலந்துக்கொண்ட போராட்டம் நடைபெற்றது.
பின் அலி ஆட்சிக்கு வந்தபிறகு முதல் முறையாக இத்தகையதொரு போராட்டம் நடப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்த தொழிலாளி இயக்கங்கள் அழைப்புவிடுத்தன. முன்னாள் உளவுத்துறை தலைவரான பின் அலி ஆட்சிபுரிந்தால் நாட்டில் ஜனநாயகம் உருவாகாது என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை உயர்வு, ஊழல், வேலையின்மை ஆகியவற்றைக் கண்டித்துதான் போராட்டம் நடைபெறுகிறது.
1956 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய துனீசியாவின் இரண்டாவது அதிபர்தான் 74 வயதான பின் அலி ஆவார்.
RSS Feed
January 16, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment