animated gif how to

பதுளையில் நடப்பது என்ன? வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்

November 28, 2012 |

-மௌலவி HMM.இர்ஷாத்-
கடந்த 2012-08ம் மாத இறுதியில் ஒரு துண்டுப் பிரசுரம் பதுளை நகரில் வாழும் சிங்கள மக்களுக்கு மத்தியில் வினியோகிக்கப்பட்டிருந்தது .அதில் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், அவர்களுக்கு காணிகள் விற்காதீர்கள் 2001ம் ஆண்டு 7 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 2011ல் 14 வீதமாகி விட்டார்கள். 2021ல் 25-30 வீதமாகி விடுவார்கள். 2031ல் 50-60 வீதமாகி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் இன்னும் பலவிடயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மிக மோசமானவர்களாகவும் சித்தரித்து படங்கள் மற்றும் கருத்துக்களைத் வெளியிடும் சில வெப்தளதங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அவ்வெப்தளங்களின் முகவரிகள் அடங்கிய DVD யும் வினியோகிக்கப்பட்டிருந்தது.
மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் பதுளை நகரில் திடீரென இப்படியானதொரு கருத்து எப்படி வந்தது. இதை யார் செய்கிறார்கள் இதன் விளைவுகள் எப்படியானதாக இருக்கப்போகிறது என்ற கேள்வியோடும், எதிர்காலத்தில் பிரச்சினைகள் உருவாகாமல் எமது சமூகத்தையும் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை செய்ததில், முதற்கட்டமாக பௌத்த மத குருமார்களை சந்தித்து நிலமைகளை விளக்கிச் சொல்வது என முடிவுசெய்யப்பட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டோம்.
இரண்டு மாதம் கழித்து 2012-10-24ம் திகதி கிடைத்த ஒரு செய்தியில்: மறுநாள் 2012-10-25ம் திகதி வியாளக்கிழமை பங்களாதேஷில் நடந்த ஒரு அசம்பாவிதத்தைக் கண்டித்து பதுளை நகரில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சிலர் தயாறாகிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதைக் காரணமாக வைத்து மறுநாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கெதிராக மீண்டும் ஆர்பாட்டமோ அல்லது கலவரமோ ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் எனவே முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.
அதன்படி பதுளை ஜும்மா மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் ஆர்பாட்டக்காரர்களினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலும் நாம் சட்டத்தை மதித்து பாதுகாப்பு அதிகாரிகளின் ஊடாக முறையான நடைவடிக்கைகளை மேற்கொள்வோம். யாரும் பிரச்சினைகள் வளர இடம் கொடுக்கக்கூடாதுஎன்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதின் பேரில் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஆர்பாட்டம் நிறைவுபெற்றது.
இந்த ஊர்வலம் நடந்த பிறகுதான் இதன் பின்னணியில் இருந்து கொண்டு இனவாதக் கருத்துக்களைக் கூறி அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு இனக்கலவவரத்தை உருவாக்க முயற்சிப்பது இந்த பொதுபல சேனாஎன்ற அமைப்புத்தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
இதற்குப்பிறகு நடக்கவிருந்த சில அசம்பாவிதங்களும் சில நலன் விரும்பிகளின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது.
இது நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து அதே வியாழக்கிழமை காலை 10 மணியளவில் 22-11-2012ம் திகதி பதுளை நகரில் முஸ்லிம் வியாபாரி ஒருரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் கையுறை ஒன்றை வாங்கிக் கொண்டு அதற்கு பற்றுச் சீட்டு தருமாறு வேண்டியிருக்கிறார். சுமார் 2 மணித்தியாலயத்தின் பின் அவரின் கடைக்கு வந்த பதுளை பொலிஸ் நிலையத்ததைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கடையில் விற்பனைக்கு வைத்திருக்கும் கையுறைகளை சோதனையிட வேண்டும் என்று வேண்டியதாகவும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அந்த வகையான புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகளை காட்டுமாறும் கடை உரிமையாளரை கேட்டிருக்கிருக்கின்றனர்.
அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் தாம் அப்படி புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறையையும் யாருக்கும் விற்பனை செய்யவில்லை எங்களிடம் அப்படியான கையுறைகளும் இல்லை என்று கூறியிருக்கிறார். உடனே பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே கடைக்கு வந்து கையுறை வாங்கிச் சென்ற இளைஞரை அழைத்து அவரின் கையிலிருந்த கையுறையைக் காட்டுமாறு கேட்டபோது புத்தரின் படம் பொறிக்கப்பட்ட ஒற்றைக் கையுறையை காட்டி இருக்கிறார்.
தான் இப்படியான கையுறையை யாருக்கும் விற்பனை செய்யவில்லையென்றும் தனது கடையில் இத்தகைய கையுறைகள் கிடையாது என்றும் எடுத்துக் கூறியும் பொலிஸ் அதிகாரிகள் கடையை முழுமையாக சோதனையிட்டு கடையில் இப்படியான கையுறைகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் கடை உரிமையாளரும், கையுறையை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை ஊழியரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
கடைக்கு வெளியே வரும் போது வெளியூரைச் சேர்ந்த ஒருவர் கடைக்கு வெளியே நின்றுகொண்டு பல கோணங்களிலிருந்தும் கடையையும், கடை உரிமையாளரையும் படமெடுப்பதையும் அவதானித்திருக்கின்றார்.
அன்று மாலையே அங்கு எடுக்கப்பட்ட மொத்தம் 45 படங்கள் பொதுபல சேனாஎன்ற பெயரில் உள்ள பேஸ்புக் பேஜ் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது.
(குறித்த கடையில் விற்பனை செய்யப்படும் கையுறைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கையுறைகளாகும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.)
கடை உரிமையாளரும் அவரது உழியரும் கைது செய்யப்பட்டு பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இது விடயமாக முறைப்பாடு செய்வதற்கு ஏற்கனவே ஒரு பௌத்த தேரர் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருப்பதும் மற்றொரு கையுறை அவரிடம் இருந்ததும் தெரிய வந்திருக்கிறது.
மறுநாள் காலை 10 மணியளவில் கலகக்காறர்கள் சுமார் 150 பேர் வரை பதாதைகளை ஏந்திக் கொண்டு முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த வியாபாரிக்குத் தண்டனை வழங்கக் கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை பொது பல சேனாஎன்ற அமைப்பினர் பதுளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தார்கள். (இதில் பதுளையைச் சேர்ந்தவர்கள் 20 பேருக்கும் குறைவானவர்களே என்று ஆர்பாட்டத்தை பார்வையிட்ட பொதுமக்கள் கூறுகிறார்கள்.)
அந்தத் தகவல்களும் ஆர்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களும் அவர்களது வெப்தளத்திலேயே வெளியிடப்பட்டிருந்தது.
ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரும் இந்த பொதுபல சேனாஎன்ற அமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக இருக்கின்றார் இதுவரை நடந்த எதிர்ப்புப் பேரணிகளுக்கும் அவரே தலமை தாங்கி இருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
நீதிமன்றத்தில் வளக்கு விசாரணைக்கு வந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்த சட்டத்தரணிகள் ஆறு பேர், (அதில் ஒருவர் பெண் சட்டத்தரணியாவார்) சுயேச்சையாகவே கடை உரிமையாளருக்காக நீதிமன்றில் ஆஜராகி அவரின் விடுதலைக்காக பரிந்துரை செய்ததாகவும் அதன் பேரில் குறித்த கடை உரிமையாளரும் கடை ஊழியரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தலா 5000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதேநேரம் வெள்ளிக்கிழமை பதுளை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிவிட்டு பதுளை பண்டாறவளை வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் இவ்வார்பாட்டக் காரர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். முச்சக்கர வண்டியும் சேதமாக்கப்பட்டது. அவர்கள் இருவரும் றாகலையைச் சேர்நதவர்கள்.
எமது முஸ்லிம் சகோதர்கள் இருவரையும் தாக்கி அவர்களது முச்சக்கர வண்டியை சேதப்படுத்திய இரு நபர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நிலையிலும், பலரும் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியும் பதுளை மஸ்ஜித் நிர்வாகிகள் வேண்டிக் கொண்டதன்பேரில் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. அவருக்குத் தேவையான உதவிகளை செய்து நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். சிலர் இதை வைத்து நம்மை குறைகூறி வருகிறார்கள். உண்மையில் முறைப்பாடு செய்யாமல் இருப்பதில் பலநலவுகள் இருக்கிறது என்ற ஆலோசனையின்படியே அவ்வாறு முடிசெய்யப்பட்டது.
மேற்படி கையுறை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கையுறை விற்பனை செய்யப்பட்டதாகக்கூறப்படும் கடையும், அவர்களுக்கு கொழும்பிலிருந்து கையுறைகளை அனுப்பி வைக்கும் கடையும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவ்விரு கடைகளிலும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் எதுவும் இருக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மீண்டும் சனிக்கிழமை (24-11-2012) மாலை முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான 6 ஆடுகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் திருடிக்கொண்டு போய் ஒரு ஆட்டை வெட்டிப்போட்டிருக்கிறார்கள். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சனிக்கிழமை இரவிலிருந்து நகரில் மேலதிக பாதுகாப்புப் பணியில் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இன்றுவரை நகரில் ஒருவித அச்சமான நிலையே தொடர்கிறது.
30 வருட யுத்தத்தினால் இந்நாட்டில் நாம் அனுபவித்த துன்பங்கள் போதும். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக வாழும் இத்திருநாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் உண்டாக இடம் கொடுக்க வேண்டாம். இது ஒரு கையுறை வியாபாரத்தினால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. அண்மைகாலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படு வரும் சதிமுயற்சிகள் என்ற நாடகத்தின் ஒரு அங்கமே. எனவே இப்பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றே பதுளை முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!